சென்னை: இன்றைய உலகத்திற்கு தேவையான படம் “குபேரா” என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் “குபேரா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். “குபேரா” திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் திரைப்படத்தின் அளவை 3 மணி 2 நிமிடங்களாக குறைத்துள்ளனர். குபேரா படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகும் நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, நடிகர் தனுஷ் கூறுகையில்,” குபேரா ரொம்ப ஸ்பெஷலான படம். தமிழ் படம், தெலுங்கு படம். இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக படமாக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகத்திற்கு மிகத் தேவையான படம். குபேரா ரொம்ப நல்லா வந்துருக்கு. நான் ரொம்ப நம்பிக்கையோடு இருக்கேன். என்னை நம்பி நீங்க பார்க்கலாம்” என்றார்.