களவாணி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய விமல், கிராமத்துச் சூழலை மையமாகக் கொண்ட கதைகளில் தொடர்ந்து நடித்தார். ஆரம்பத்தில் சில படங்கள் வெற்றியைப் பெற்றாலும், பின்னர் வெளியான பல படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவில் ஒரு இடைவேளை எடுத்தது போன்ற நிலைமை உருவானது.

இந்த கட்டத்தை மாற்றியதுதான் ‘விலங்கு’ என்ற வெப்சீரிஸ். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த தொடரானது விமலுக்கு மீண்டும் ஒரு ரீஎன்ட்ரியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக அவர் நடித்த ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ மற்றும் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘சார்’ ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இப்போது விமல் நடிப்பில் உருவாகி உள்ள ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் விரைவில் வெளியீடு காணவிருக்கிறது. இந்த படத்துக்கான ப்ரோமோஷனுக்காக அண்மையில் அவர் அளித்த ஒரு நேர்காணலில், சமூகவலைதளங்களில் தனது மீது வந்த விமர்சனங்கள் குறித்தும், ‘கேலக்ஸி ஸ்டார்’ என அழைப்பதைப் பற்றியும் திறமையாக பதிலளித்துள்ளார்.
“என்னை ‘கேலக்ஸி ஸ்டார்’ன்னு சொல்லி ஓட்றானுங்கன்னு நெனைக்குறேன். அந்த டைட்டிலுக்கு எனக்கு விருப்பம் இல்ல. ஒரு படம் எடுத்தப்போ என்கிட்ட ‘இந்த டைட்டிலை உபயோகிக்கலாமா’ன்னு கேட்டாங்க. நாம எதுக்கோ இமாலயத்துக்கு போறதுக்குள்ள ஏறி விட்ட மாதிரி இப்படி எல்லாம் சொல்றாங்க. அது நக்கலா தான் சொல்லப்படுறது. அதைக் கொஞ்சம் யாராவது உண்மையா எடுத்துடுறாங்க. அதனால அதை போட வேண்டாம் என சொன்னேன்,” என அவர் கூறினார்.
விமலின் இந்த நேர்மையான பதில், தன்மேல் நடக்கும் சமூக வலைதள விமர்சனங்களை அவர் எவ்வித பாதிப்பும் இல்லாமல், நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார் என்பதைக் காட்டுகிறது. சினிமா துறையில் உள்ளவர்களுக்கு பாப்புலாரிட்டியுடன் சேர்த்து நேர்மையான தன்னம்பிக்கையும் அவசியமென்பதை இந்த பேச்சு உணர்த்துகிறது.
‘பரமசிவன் பாத்திமா’ படத்தை தாண்டி, மேலும் சில படங்களில் நடிக்கும் திட்டங்களுடன் அவர் தற்போது முன்னேறி வருகிறார். தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு கிடைத்தால், இந்த ரீஎன்ட்ரி நிலையான வளர்ச்சியாக மாறும் என்பது உறுதி.