மாமல்லபுரம்: ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பாக ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஓபன் பிரிவில் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
போட்டியின் 6-வது நாளான நேற்று, ஆண்களுக்கான ஓபன் காலிறுதி ஹீட் 1-ல் இந்தியாவின் ரமேஷ் புத்திஹால் 14.84 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். அரையிறுதியில், ரமேஷ் புத்திஹால் ஹீட் 1-ல் 11.43 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம், ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய சர்ஃபர் என்ற பெருமையைப் பெற்றார். இன்று காலை இறுதிப் போட்டி நடைபெற்றது. ரமேஷ் புத்திஹால் 12.60 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்தப் பிரிவில் முதல் இரண்டு இடங்களை தென் கொரியாவின் கனோவா ஹீஜே (15.17) மற்றும் இந்தோனேசியாவின் பஜார் ஹரியானா (14.57) ஆகியோர் பிடித்தனர்.