பெக்கன்ஹாம்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து புறப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெடிங்லியில் தொடங்குகிறது. இதையொட்டி, இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, இந்திய அணி வீரர்கள் நேற்று இந்தியா ஏ அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடினர்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவசரமாக இந்தியா புறப்பட்டார். கம்பீரின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக அவசர சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் இந்தியா திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்பீர் இல்லாத நிலையில், 4 நாள் பயிற்சி போட்டிக்கான அணியின் பொறுப்பை உதவி பயிற்சியாளர் ரியான் டென் டஸ்ஷேட் ஏற்றுக்கொண்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆகியோர் அவருக்கு உதவ வாய்ப்புள்ளது. சொந்த ஊரில் நிலைமை திருப்திகரமாக இருந்தால், கம்பீர் ஒரு வாரத்திற்குள் இங்கிலாந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.