அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஹாங்காங் அணி.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேசம்- ஹாங்காங் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹாங்காங் அணி வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடினர்.
தொடக்க வீரர் அன்ஷி ராத் 4 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ஜீஷன் அலி 34 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிசாகத் கான், கேப்டன் யாசிம் முர்தாசா நிலைத்து நின்று விளையாடினர். இதனால் ஹாங்காங் 14.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
நிசாகத் கான் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யாசிம் முர்தசா 28 ரன்னில் வெளியேறினார். இறுதியாக ஹாங்காங் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.