மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை முதன்முறையாக வென்றதன் மூலம் இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டரில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. கேப்டன் சோபியா டங்கலி 22, டாமி பியூமண்ட் 20, ஆலிஸ் கேப்சி 18 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஸ்ரீ சரணி மற்றும் ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 127 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 32 ரன்கள், ஷஃபாலி வர்மா 31 ரன்கள், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 26 ரன்கள், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்கள் எடுத்தனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை 3-1 என கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரை இந்தியா வென்றது இதுவே முதல் முறை. 2006-ம் ஆண்டு டெர்பியில் நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்தது. அதன் பின்னர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இங்கிலாந்துக்கு எதிரான ஒவ்வொரு டி20 தொடரிலும் இந்திய மகளிர் அணி தோல்வியை சந்தித்துள்ளது.
டி20 தொடரை அவர்கள் வென்றது இதுவே முதல் முறை. இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில், இங்கிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி மற்றும் 5-வது டி20 போட்டி நாளை பர்மிங்காமில் நடைபெறும்.