2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக மிட்செல் ஸ்டார்க் விலகல் அமைந்துள்ளது. இந்த தகவல் அவரது மேலாளர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஒரு வாரம் தாமதமான ஐபிஎல், மே 16 முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது.ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் தொடரில் பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கின்றனர்.

அந்த வரிசையில் மிட்செல் ஸ்டார்க் இந்தியா திரும்ப மாட்டார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லி அணியில் அவருக்கு மாற்றாக வேகப்பந்துவீச்சில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.அந்த அணி தற்போது ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய அவசியம் உள்ளது. பிளேஆஃப் வாய்ப்பு நிலைத்திருக்கும் நிலையில் நடராஜன் முக்கிய பங்கு வகிக்கலாம்.
போருக்குப் பிறகு தொடர் மீண்டும் துவங்கும் நிலையில், நடராஜனின் பந்து வீச்சு டெல்லிக்கு பெரும் ஆதரவாக அமையக்கூடும். கடந்த சில சீசன்களில் அவர் யார்க்கர் பந்துகள் மூலம் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். ஆனால் இந்த சீசனில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மிட்செல் ஸ்டார்க் இல்லாத இந்த தருணம் நடராஜனுக்கு தன்னை நிரூபிக்க சிறந்த சூழல். கடந்த காலங்களில் பிளேஆஃப் போன்ற முக்கிய போட்டிகளில் ஸ்டார்க் தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரை இழந்த டெல்லி அணிக்கு, நடராஜன் ஒரு புதிய நம்பிக்கை தோன்ற வைக்கக்கூடும்.தற்போது டெல்லி அணியின் பந்துவீச்சு வலுவிழந்த நிலையில், நடராஜனின் பங்கேற்பு எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது. ரசிகர்களும் அவரது ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். IPL 2025 தொடரின் மீதமுள்ள பயணத்தில் இது முக்கிய முடிவாக இருக்கலாம்.