மும்பை: மகளிர் பிரிமியர் லீக்கின் மூன்றாவது சீசன் பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கியது. இதில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றன. இதில் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின.
இதில் மும்பை அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. மும்பையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி துரத்தியது.

டெல்லி அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (30 ரன்கள்), மரிசான் கேப் (40 ரன்கள்), நிகி பிரசாத் (25 ரன்கள்) ஆகியோர் அடித்தனர். அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவரை நடந்த மூன்று சீசன்களில் டெல்லி மூன்று முறை பைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், கோப்பையை வெல்லும் வாய்ப்பை அந்த அணி தவறவிட்டது.