ஐபிஎல் 2025 தொடரின் 54வது லீக் போட்டி மே 4ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 236 ரன்கள் குவித்தது. பஞ்சாப் சார்பில் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக 91 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 45, சசாங் சிங் 33* மற்றும் ஜோஸ் இங்கிலிஷ் 30 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பின்னர் 237 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்திலிருந்தே தடுமாறியது. நிக்கோலஸ் பூரான் 6, மிட்சல் மார்ஷ் 0, மார்க்ரம் 13, கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். ஆயுஷ் படோனி மட்டும் எதிர்ப்பை ஏற்படுத்தி 74 ரன்கள் எடுத்தார். அப்துல் சமத் 45 ரன்கள் எடுத்தாலும், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், ஓமர்சாய் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் ஐபிஎல் 2025 சீசனில் தங்களது ஏழாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த முதல் வெற்றி என்பது சிறப்பு. கடந்த முறையாக 2013ல் அந்த மைதானத்தில் வென்ற பஞ்சாப் அணி அதன் பின்னர் அங்கே விளையாடிய நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தது.
வெற்றிக்கு பின் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “நாங்கள் தரம்சாலாவில் வெற்றிப் பதிவு செய்யாததைக் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பழைய பதிவுகளும் மக்களின் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நாங்கள் வெற்றி நோக்கி முன்னேற முயன்றோம். இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைகிறேன். பங்காற்றிய ஒவ்வொரு வீரருக்கும் பாராட்டு” என்றார்.
அதோடு, “பிரப்சிம்ரன் சிங் இந்த போட்டியில் அற்புதமாக விளையாடினார். அவரது ஆட்டத்தை பார்ப்பது கண்களுக்கு விருந்தாக இருந்தது. எங்களுடைய அணியின் ஒவ்வொரு வீரரும் தங்களது வேலையைச் சிறப்பாக செய்து வருகின்றனர். நாங்கள் எடுத்த முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் அதிர்ஷ்டம் சேர்ந்து வெற்றியை உறுதி செய்கின்றன” எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, “வெற்றியின் முக்கியத்துவம் புள்ளிப்பட்டியலில் அல்ல. ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். சிக்கலான தருணங்களில் யாரெலா நம் அணிக்கு முதுகெலும்பாக அமைகிறார்கள் என்பதே வெற்றிக்கான மர்மம். நாங்கள் மேலதிக சிந்தனைகள் இல்லாமல் உள்ளுணர்வுகளை நம்பி விளையாடுகிறோம்” எனவும் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கினார்.
இந்த வெற்றியால் பஞ்சாப் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ரசிகர்களும் இதனால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தரம்சாலா மைதானத்தில் வந்த இந்த வெற்றி, பஞ்சாப் அணிக்கு உந்துதலாக அமையும் என்ற நம்பிக்கை தற்போது உருவாகியுள்ளது.
இதுபோன்ற வெற்றிகள் அணியின் மனச்சக்தியை பலப்படுத்தும் என்பதை அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் நிரூபித்துள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் அடுத்த ஆட்டங்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.