மும்பை: ஐசிசி டி20 கோப்பை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
3-வது முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் தற்போதைய நட்சத்திரங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியா உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றது, டி20 வடிவத்தில் எந்த அணியும் இதைச் செய்தது இல்லை. இதுவே முதல் முறை. கோப்பையை வெல்ல முற்றிலும் தகுதியான மற்றும் சரியானவர்கள்.
அணியின் அற்புதமான செயல்திறன் மற்றும் கிரிக்கெட்டின் சிறப்பு பிராண்ட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்! என தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: அகமதாபாத்தில் இந்திய அணிக்கு கிடைத்த அபார வெற்றி. போட்டி முழுவதும் விளையாடிய அதிரடி கிரிக்கெட். கடினமான சூழ்நிலைகளில் தொடர்ந்து போராடி மீண்டும் உலக சாம்பியன்களாக மாற இந்திய வீரர்கள் காட்டிய அற்புதமான குணம். இந்த சாதனையை நிகழ்த்திய அனைத்து வீரர்களுக்கும் நிர்வாகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் என தெரிவித்துள்ளார்.