புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கத்தை கையாளும் பெண்களில் தமிழக செஸ் வீராங்கனை வைஷாலியும் ஒருவர். சர்வதேச மகளிர் தினமான அன்றைய தினம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தை பெண்கள் கையாளுவார்கள் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினம் என்பதால் மோடியின் சமூக வலைதள பக்கத்தையும் தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாண்டு வருகிறார்.
பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகளிர் தின வாழ்த்துகள் பதிவிடப்பட்டுள்ளன. ‘நான் வைஷாலி, மகளிர் தினத்தன்று நமது பிரதமர் மோடியின் சமூக வலைதளப் பக்கத்தைக் கையாள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், உங்களில் பலருக்குத் தெரியும், நான் செஸ் விளையாடுகிறேன், மேலும் பல போட்டிகளில் எங்கள் அன்பான நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நான் ஜூன் 21 அன்று பிறந்தேன்; அந்த நாள் சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. நான் 6 வயதிலிருந்தே செஸ் விளையாடி வருகிறேன். செஸ் விளையாடுவது எனக்கு ஒரு கற்றல் செயல்முறை. விளையாட்டு எனக்கு புத்துணர்ச்சியூட்டும் பயணமாக அமைந்தது. எல்லா பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். தடைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் கனவுகளைத் தொடருங்கள். உங்கள் ஆர்வமே உங்கள் வெற்றிக்கு சக்தி அளிக்கும் சக்தி.
பெண்கள் தங்கள் கனவுகளைப் பின்பற்றி அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் தடைகளை உடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் பெண்களால் முடியும் என்று நான் நம்புகிறேன். என் வாழ்வில், எனது பெற்றோர்களான ரமேஷ் பாபு மற்றும் நாகலட்சுமி ஆகியோரின் ஆசிர்வாதம் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. சிறந்த செஸ் வீரரான எனது சகோதரர் பிரக்ஞானந்தா எனது பயிற்சியாளர். அவரை ஒரு சகோதரனாகப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி, ”என்று அவர் கூறினார்.