புலவாயோவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி அபார ஆட்டத்தால் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து, இந்த ஆட்டத்தில் தனது வலிமையை வெளிப்படுத்தியது. ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 125 ரன் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி பதிலுக்கு 601/3 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

மூன்றாம் நாளில் 476 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய ஜிம்பாப்வே அணி முற்றிலும் தடுமாறியது. பிரையன் பென்னட், பிரண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ், கேப்டன் கிரெய்க் எர்வின், சிக்கந்தர் ராஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டானார்கள். நிக் வெல்ச் மட்டுமே 47 ரன் எடுத்து சிறிதளவு எதிர்ப்பு காட்டினார்.
இரண்டாவது இன்னிங்சில் ஜிம்பாப்வே 117 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்தின் ஜகாரி ஐந்து விக்கெட் எடுத்தார், மாட் ஹென்றி மற்றும் ஜேக்கப் டபி தலா இரண்டு விக்கெட் பெற்றனர். ஆட்ட நாயகன் விருதை கான்வே பெற்றார், தொடர் நாயகன் விருதை 16 விக்கெட் பெற்ற மாட் ஹென்றி தட்டிச் சென்றார்.
இந்த வெற்றி நியூசிலாந்தின் டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாகும். இதற்கு முன் 2012ல் நேப்பியரில் ஜிம்பாப்வேக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 301 ரன் வித்தியாசத்தில் வென்றது இவர்களின் சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனையை முறியடித்து, இன்னிங்ஸ் மற்றும் 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
சிறந்த இன்னிங்ஸ் வெற்றிகளின் பட்டியலில் நியூசிலாந்து மூன்றாவது இடம் பிடித்துள்ளது. முதலிரண்டு இடங்களில் இங்கிலாந்து (இன்னிங்ஸ் மற்றும் 579 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1938, ஓவல்) மற்றும் ஆஸ்திரேலியா (இன்னிங்ஸ் மற்றும் 360 ரன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2002, ஜோகனஸ்பர்க்) உள்ளன.