ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதால், இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் மீண்டும் பதட்டம் உருவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தங்கள், சிந்து நதி நீர் ஒப்பந்தம், சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உடன்படிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவும் பாகிஸ்தானும் பதட்டங்களைத் தணித்து, அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். பஹல்காமில் நிகழ்ந்த தாக்குதலை அவர் கடுமையாக கண்டித்தார். இதற்கான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.
அதேசமயம், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் கூறியதாவது: மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசினார். இருவருடனும் நடத்திய உரையாடலில், நிலவரத்தை அமைதியாக கையாள வேண்டியது மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேசினார். பஹல்காம் தாக்குதலில் நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியா–பாகிஸ்தான் உறவுகள் குறித்து கவலை தெரிவித்த அவர், “எந்தவொரு மோதலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்” என்று எச்சரித்தார்.