
காங்கோவில் உள்ள ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காங்கோவில் ஆறுகள் முக்கிய போக்குவரத்து வழியாக இருக்கின்றன. மக்கள் பெரும்பாலும் படகு மூலமாக பயணம் செய்கின்றனர். வடமேற்கு பகுதியில் உள்ள மடான் குமு துறைமுகத்திலிருந்து போலோம்பாவை நோக்கி 500க்கும் மேற்பட்டோர் மோட்டார் படகில் பயணித்தனர்.
பன்டாக்கா பகுதியில் சென்ற போது படகில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. பயணித்தவர்கள் தப்பிக்க ஆற்றில் குதித்ததால் படகு கவிழ்ந்தது. இதில் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 100 பேர் மாயமாகியுள்ளனர்.தப்பிய உயிர்களான 100 பேர் தற்போது உள்ளூர் டவுன் ஹாலில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்பு படை அதிகாரிகள் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.