ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் நக்சல் பாதிப்புக்குள்ளான மன்பூர்-மொஹ்லா-அம்பாகர்-சௌகி மாவட்டத்தின் அணுக முடியாத மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளில் உள்ள 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதலமைச்சரின் மஜ்ரதோலா விச்யுதிகரன் யோஜனாவின் கீழ், ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த மின்சார வசதிகளால் 540 குடும்பங்கள் பயனடைய உள்ளன.
கடினமான நிலப்பரப்பு மற்றும் நக்சல் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்த பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு வருவது ஒரு சவாலான பணியாக இருந்தது. அதிகாரிகள் கூறியதாவது: “இந்த கிராமங்களுக்கு முன்பு சூரிய மின்சக்தி பேனல்கள் மூலம் மின்சாரம் கிடைக்கும். ஆனால் பல கிராமங்களில் சூரிய மின்சக்தி பேனல்கள் திருடப்பட்டன. இதன் காரணமாக, குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்குகளின் கீழ் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, கிராம மக்கள் மின்சாரம் கிடைப்பதைக் கொண்டாடி வரவேற்றனர். பல ஆண்டுகளாக காத்திருந்த பிறகு பல கிராமங்களில் குழந்தைகள் நடனமாடினர், பெரியவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசுகளை வெடித்தனர்.

17 கிராமங்களில் உள்ள 540 குடும்பங்களில், 275 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கடினமான பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். அந்தப் பகுதிகளில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும். இந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள மன்பூர்-மொஹ்லா-அம்பாகர்-சௌகி மாவட்டம், நக்சல்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி பஸ்தார் மற்றும் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.