திருவனந்தபுரம்: லைபீரியாவில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பல் MSC Elsa 3 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தின் விழிஞ்சம், கொச்சிக்கு புறப்பட்டது. அதில் 600-க்கும் மேற்பட்ட சரக்கு கொள்கலன்கள் இருந்தன. இவற்றில், 25 கொள்கலன்களில் கால்சியம் கார்பைடு உள்ளிட்ட ஆபத்தான அமிலப் பொருட்கள் இருந்தன. இந்த சூழ்நிலையில், கப்பல் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மூழ்கத் தொடங்கியது. இது குறித்த தகவல் கிடைத்ததும், கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை கொச்சியில் இருந்து மீட்புக் கப்பல் மற்றும் விமானத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
அவர்கள் உடனடியாக அதில் இருந்த 24 ஊழியர்களையும் மீட்டனர். சரக்குக் கப்பல் நேற்று காலை முழுமையாக மூழ்கியது. அமிலப் பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் உட்பட அனைத்து கொள்கலன்களும் கடலில் விழுந்தன. இதற்கிடையில், நேற்று அதிகாலை கொல்லம் மற்றும் ஆலப்புழா கடற்கரைகளில் சில கொள்கலன்கள் கரை ஒதுங்கின. கொல்லம் மாவட்டத்தில் கருநாகப்பள்ளி அருகே உள்ள செறிய அழிக்கல் மற்றும் எண்டகரை பகுதிகளிலும், ஆலப்புழா மாவட்டத்தில் வலியஅழிகல் பகுதியிலும் இந்தக் கொள்கலன்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இந்தப் பகுதியில் 27 கொள்கலன்கள் கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய கொள்கலன்கள் பெரும்பாலும் திறந்த நிலையில் காணப்பட்டன. சில கொள்கலன்களில் சீன பச்சை தேயிலை மற்றும் பருத்தி இருந்தன. கொள்கலன்கள் கரை ஒதுங்கிய பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கப்பல் கவிழ்ந்த பகுதி மற்றும் கொள்கலன்கள் கரை ஒதுங்கிய பகுதிகளை கடலோர காவல்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.