புது டெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதில், 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முன்னதாக, உச்ச நீதிமன்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிலையில், நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க மனு தாக்கல் செய்யலாம். இதற்கான ஆதாரமாக ஆதார் அட்டையை வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெயர் சேர்ப்பதற்கான 11 ஆவணங்களுடன் ஆதாரை இணைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. பீகாரில் பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஏன் உதவவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
“அரசியல் கட்சிகள் தங்கள் வேலையைச் செய்யவில்லை. அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.