ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு, ஏசி பெட்டிகளில் காலியிடங்கள் இருந்தால் அவற்றில் இடமளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணம் என்பது பொதுமக்களுக்கு மிகவும் வசதியானதாக இருக்கின்றது. குறைந்த கட்டணத்தில், குறைந்த நேரத்தில் பயணிக்க முடியும் என்பதால்தான் ரயில் பயணம் பலருக்கும் விருப்பமானதாக இருக்கிறது. ஆனால், டிக்கெட் பெறுவது பெரும்பாலும் சிரமமாக உள்ளது. குறிப்பாக விடுமுறை காலங்களில் டிக்கெட் புக்கிங் அவசியமாக நிறைவடையாது.
இந்த நிலையை சமாளிக்க, ரயில்வே நிறுவனம் ஏற்கனவே 2006ஆம் ஆண்டு ‘மேம்படுத்தல் திட்டம்’ என்ற பெயரில் ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள், உயர் தர பெட்டிகளில் காலியிடம் இருந்தால் அதில் இடமளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தினை தற்போது மேலும் விரிவாக்கம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இரண்டாம் வகுப்பு தூங்கும் பெட்டிகளில் காத்திருப்பவர்களுக்கு 3ஆம் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலியிடம் இருந்தால் அந்த இடத்தில் இருக்கை வழங்கப்படும்.
இதேபோல் 3ஆம் வகுப்பு எகனாமி மற்றும் 3ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கும் மேலதிக ஏசி வகுப்புகளில் காலியிடம் இருந்தால் அதில் இடமளிக்கப்படும். இதில் கூடுதல் கட்டணம் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கை பெட்டிகளிலும் இதே முறை நடைமுறையில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முடிவுகள் மூலம் பயணிகளுக்கு அதிக வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.