அகமதாபாத்: இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு கரண் அதானி மற்றும் ஜீத் அதானி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரண் அதானிக்கும் பரிதி என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையில் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும், குஜராத்தின் பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காந்திகிராமில் ஜெயின் முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கலந்து கொண்டனர். இது குறித்து கௌதம் அதானி தனது X பதிவில், “இது மிகவும் சிறிய மற்றும் தனிப்பட்ட நிகழ்வு. அதனால் நாங்கள் விரும்பினாலும் அனைத்து நலம் விரும்பிகளையும் அழைக்க முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தனது இளைய மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா ஆகியோரின் திருமணத்தையொட்டி, பல நலத்திட்டங்களுக்கு நன்கொடை அளிப்பதாக கவுதம் அதானி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, அவர் கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரூ. 10,000 கோடி நன்கொடை வழங்கினார். இதைப் பயன்படுத்தி மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.