புதுடில்லி: ஆப்கானிஸ்தான் நாட்டு அமைச்சருடனான சந்திப்பில் பெண் நிருபர்கள் அனுமதிக்க மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 2021 இல் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று ஜெய்சங்கர் கூறினார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தாலிபான் தாங்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான விதித்து வருவது தெரிந்ததே. அந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் கவலை தெரிவித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் இருந்து பெண்களை விலக்கி வைக்கும் கொள்கைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு தாலிபான்களை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மண்ணில் தாலிபான்களை திருப்திப்படுத்த பெண் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்து பெண் ஒடுக்குமுறைக்கு மத்திய அரசு துணை போகிறதா என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர். அதேநேரம் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆண் பத்திரிகையாளர்கள் பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும் என்றும் ஆனால அதற்கான சான்றாண்மை இல்லாமல் அவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.