புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது குறித்து பாகிஸ்தானுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலர் தேவஸ்ரீ முகர்ஜி, இந்திய அரசின் இந்த முடிவை பாகிஸ்தான் நீர்வள அமைச்சகச் செயலர் சையத் அலி முர்தாசாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் மாற்றங்கள் குறித்து இந்தியா அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒப்பந்தத்தின் பிரிவு XII (3)ன் கீழ் 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்கக் கோரி பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒப்பந்தத்தின் பல்வேறு இணைப்புகளின் கீழ் உள்ள கடமைகள் ஒப்பந்தம் முடிவடைந்ததிலிருந்து சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் வெளிச்சத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். இந்த மாற்றங்களில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மாற்றங்கள், தூய்மையான எரிசக்தி வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் ஒப்பந்தத்தின் கீழ் நதி நீரை பகிர்ந்து கொள்வதற்கு அடிப்படையான அனுமானங்களில் உள்ள பிற மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.
நல்ல நம்பிக்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை மதிப்பது அதன் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். ஆனால், இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். இதன் விளைவாக ஏற்பட்ட பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மை, ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கிறது. பாகிஸ்தானின் மற்ற அத்துமீறல்கள் தவிர, ஒப்பந்தப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைகளை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இதனால் ஒப்பந்தத்தை மீறியுள்ளது.
எனவே இந்திய அரசு 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் ஜல் சக்தி செயலாளர் சி.ஆர்.பாட்டீல் தலைமையில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன. புதன்கிழமை பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்ட பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 9 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உலக வங்கியின் உதவியுடன் சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960-ல் கையெழுத்தானது. இது சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகிய ஆறு நதிகளின் நீரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பகிர்ந்து கொள்வது பற்றி கையாள்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆறுகளின் மேற்குப் பகுதியை (சிந்து, ஜீலம், செனாப்) பாகிஸ்தானும், கிழக்குப் பகுதியை (ரவி, பியாஸ், சட்லஜ்) இந்தியாவும் பகிர்ந்து கொள்கின்றன.