புதுடெல்லி: முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் டிசம்பர் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட மத்திய அரசும் பாஜகவும் தயாராகி வருகின்றன.
இந்த சூழலில், ஆக்ராவில் உள்ள வாஜ்பாயின் மூதாதையர் கிராமமான படேஷ்வரை ஒரு பெரிய ஆன்மீக மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலமாக மாற்ற உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 101 சிவன் கோயில்கள் உள்ளன. இதை மேம்படுத்தி புனித யாத்திரை அனுபவமாக மாற்ற உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஃபிரோசாபாத் சாலையில் அமைந்துள்ள படேஷ்வர் கிராமத்தில் ஒரு பிரமாண்டமான நுழைவு வாயில் அமைக்கப்படும். இந்த கோயிலின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கு தனி நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள படேஷ்வரையும் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கின் அருகில் படேஷ்வர் அமைந்துள்ளது. இது அதன் பழங்கால படேஷ்வர்நாத் கோயிலுக்கும், பிரதிஹார வம்சத்தின் போது நாகரா பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்ட 101 சிவன் கோயில்களுக்கும் பிரபலமானது. இந்த கோயில்களின் புராணத்தின் படி, சிவபெருமான் ஒரு காலத்தில் இங்கு ஒரு ஆலமரத்தின் கீழ் ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது.
இந்த இடத்தின் தனித்துவமான அம்சம் ஆக்ரா வழியாகப் பாயும் யமுனை நதியின் தலைகீழ்ப் பாதையாகும். இது மட்டுமல்லாமல், மீசை மற்றும் பெரிய கண்களுடன் சிவன் மற்றும் பார்வதி தேவியின் சிலைகளும் உள்ளன.