ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இந்திய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து இந்த தாக்குதலை நடத்தியதுடன், இது நள்ளிரவில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத் மற்றும் பாபல்பூர் போன்ற இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகம்மது போன்ற அமைப்புகளின் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏவுகணைகள் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இது போர் நடவடிக்கை எனக் கூறி இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதல், 2016 உரி தாக்குதல் மற்றும் 2019 பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய மூன்றாவது பெரிய பதிலடி ஆகும். கடந்த 15 நாட்களாக திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி நேரடி ஒப்புதலும் கண்காணிப்பும் அளித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக மூப்படை அதிகாரிகளுடன் இணைந்து விவாதித்து, முழு சுதந்திரத்துடன் இந்த நடவடிக்கையை நிறைவேற்ற அனுமதித்திருந்தார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்த நடவடிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டது விசேஷ கவனத்தை பெற்றுள்ளது. ‘சிந்தூர்’ என்பது இந்து கலாச்சாரத்தில் திருமணமான பெண்கள் அணியும் திலகத்தை குறிக்கும். பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலில் குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த குடும்பங்களை குறிவைத்து, பெண்களின் திலகங்களை அழிக்கும் நோக்குடன் அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பதிலடி வழங்கும் அர்த்தத்துடன் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதல், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீதியை அளிக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிட்ட ஒரு புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இந்தியா, இன்னும் ஒருமுறை, தாக்குதலுக்கு உரிய பதில் அளிக்கத் தயாராக இருப்பதை இந்த நடவடிக்கை தெளிவாக காட்டுகிறது.