திருவனந்தபுரத்தில், கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் போலீஸ் பணிக்கான ஆள் தேர்வில், விளையாட்டு துறைக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் மற்றும் தேசிய விளையாட்டு வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கம் பெற்றவர்களுக்கு இந்த தகுதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறப்பு ஒதுக்கீடாக, ‘பாடி பில்டிங்’ போட்டிகளில் சர்வதேச அளவில் பதக்கம் பெற்றவர்களுக்கும் போலீஸ் வேலை வழங்க அரசு முடிவு செய்தது. இது எதிர்ப்புகளுக்கு உள்ளானபோதிலும், அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
இதன் அடிப்படையில், கண்ணூரைச் சேர்ந்த பாடி பில்டர் ஷினு சோவ்வா மற்றும் கொச்சியைச் சேர்ந்த சித்தரேஷ் நடேசன் ஆகியோருக்கு ஆயுதப்படையில் உதவி இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.) பதவிக்கான நியமன உத்தரவை அரசு சமீபத்தில் வழங்கியது.
நியமன உத்தரவு வழங்கப்பட்ட பின்னர், இவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஷினு சோவ்வா தோல்வி அடைந்தார். 100 மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற உடற்தகுதி தேர்வுகளில் அவர் தோல்வியடைந்தார். மற்றொரு பாடி பில்டரான சித்தரேஷ், உடற்தகுதி தேர்விலேயே பங்கேற்கவில்லை.
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விளையாட்டு பிரிவில் இடஒதுக்கீடு பெற்று போலீஸ் வேலைக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆனால், உடற்தகுதி சோதனையில் தோல்வியுற்ற நபர்களுக்கு அரசு பணியிடம் வழங்கியிருப்பது கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.