புதுடில்லி: ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் இன்று (ஆகஸ்ட் 23) சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்திய முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66 வயது. இவரது ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. அந்தக் கடன் சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் மும்பை மற்றும் டில்லியில், அனில் அம்பானியின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அதன்பின் அனில் அம்பானி நேரில் ஆஜராகி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். மும்பை, டில்லி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனில் அம்பானி மீது தொடர்ச்சியாக நடக்கும் சோதனைகள் தொழில் உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வங்கி கடன் முறைகேடு, பண மோசடி குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகள் காரணமாக, அவருடைய நிறுவனங்களின் நிலைமை மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.
மக்கள் மத்தியில் இந்த வழக்கு பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. சிலர் இதை “கண் மூடித்தனமான நடவடிக்கை” என்று விமர்சிக்க, சிலர் சட்டப்படி நடந்தேறி வருவதாகவும் கூறுகின்றனர்