அமராவதி: ஆந்திரப் பிரதேச மழைக்கால சட்டமன்றக் கூட்டம் தற்போது அமராவதியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கூட்டணி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளிப்படையான முறையில் செயல்படுத்தி வருகிறது.
சூப்பர் சிக்ஸ் திட்டம் ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் பயனாளிகளை நேரில் சந்தித்து மாதாந்திர உதவித் தொகையை வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணியை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். மக்கள் எங்களுக்கு முழு ஆதரவையும் அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படாத பல வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். விரைவில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் ஒரு முறை நிதி உதவி வழங்கப்படும். இதற்கு ஆட்டோ ஓட்டுநர் சேவை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆந்திராவில் 2,90,234 பேர் பயனடைவார்கள். இதற்காக ரூ. 435 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் மட்டுமே வழங்கியது. எனது தலைமையிலான அரசு ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கி வருகிறது. இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.