கடப்பா: ஆந்திராவின் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு நடந்து வருகிறது. இரண்டாவது நாளான நேற்று, என்.டி. ராமராவின் பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும், கட்சியின் தேசியத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், 1995 முதல் தற்போது வரை, நான் தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவராக 30 ஆண்டுகளாக இருந்து வருகிறேன்.

இப்போது, அடுத்த 2 ஆண்டுகளுக்கு நான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிச்சயமாக நிலைநிறுத்துவேன். தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு வரலாறு உண்டு. நக்சலைட்டுகளை ஒழிக்க தெலுங்கு தேசம் கட்சி போராடியது.
அதேபோல், மாநிலத்தில் உள்ள ரவுடிகளை ஒழித்தோம். ராயலசீமா மாவட்டங்கள் ஒரு காலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக இருந்தன. ஆனால், கலேரு-நாக்ரி மற்றும் ஹந்த்ரி-நீவா நீர் கால்வாய் திட்டங்களை அதே ராயலசீமாவிற்கு கொண்டு வந்தது தெலுங்கு தேசம் கட்சிதான். இவ்வாறு அவர் பேசினார்.