புது தில்லி: மியான்மரில் நேற்று ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கி.மீ தொலைவில், மதியம் 12:50 மணிக்கு 7.2 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொத்தம் இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் மியான்மரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், இடிபாடுகளில் சிக்கி 2,376 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்திலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 68 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தியா தனது நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு இந்தியா 15 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. “ஆபரேஷன் பிரம்மா” திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்பட்டது.
நிவாரணப் பொருட்களில் தார்பாய்கள், மெத்தைகள், போர்வைகள், நீர் சுத்திகரிப்பான்கள், சூரிய விளக்குகள், மருந்துகள், மாத்திரைகள், கையுறைகள் போன்றவை அடங்கும். இவை உத்தரபிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திலிருந்து C.130J விமானம் மூலம் மியான்மரின் யாங்கோனுக்கு அனுப்பப்பட்டன.
இந்த கடினமான நேரத்தில் இந்தியா மியான்மர் மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.