மொராதாபாத்: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் அமைச்சர் அசம் கான் மீது 2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு, 17 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்துள்ளது. பொது சொத்துகளை சேதப்படுத்தியதாகக் கூறப்பட்ட இந்த வழக்கில், சிறப்பு நீதிமன்றம் அசம் கானுக்கு விடுதலை அளித்துள்ளது.

அசம் கான் அமைச்சராக இருந்த காலத்தில், மொராதாபாத் சாஜ்லெட் பகுதியில் நடந்த நிகழ்வில் போலீசார் அவரது கான்வாயில் இருந்த ஒரு காரின் சைரனை அகற்றினர். இதனால் கடும் கோபமடைந்த அவர், தன் ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அப்போது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு மின்கம்பங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளை சேதப்படுத்தினர் என்று வழக்கில் கூறப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து அசம் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கு நீண்டுகொண்டே போனது. சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இது எம்.பி., எம்.எல்.ஏ.,கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆனால் உரிய சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அசம் கானுக்கு விடுதலை வழங்கப்பட்டது. இவ்வாறு 17 ஆண்டுகள் நீண்ட இந்த வழக்கு நிறைவு பெற்றது. தற்போது அவர் ஏற்கனவே பிற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.