வண்ணங்களின் திருவிழா என அழைக்கப்படும் ஹோலி பண்டிகை இன்று முழுமையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் முதலாம் நாளில் மகா விஷ்ணுவின் பக்தனான பிரகலாதனை கொல்லும் முயற்சியில் அசுர குலத்தைச் சேர்ந்த ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுவதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வட மாநிலங்களில் ஹோலிகா தகனம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் வொர்லியில், ஹோலிகாவின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடியை தூவி, நடனமாடி மகிழ்ந்தனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியில், மகாகாளேஸ்வர் கோயிலில் மரக்கட்டைகளுக்கு மத்தியில் ஹோலிகாவின் உருவ பொம்மையை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்பட்டது. இதேபோல், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ஹோலிகா தகனம் நிகழ்ச்சியை விமர்சையாகக் கொண்டாடினர்.
பல பகுதிகளில் மக்கள் நேற்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசம், அயோத்தியில், மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ந்தனர். ஹிமாச்சல் பிரதேசம், மாண்டி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலும் மக்கள் உற்சாகமாக ஹோலியை கொண்டாடினர்.
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு, சில பகுதிகளில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால், நாளை நடைபெறவுள்ள இந்தி தேர்வை எழுத முடியாத 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.