2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், விரைவாக உலகெங்கும் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலக நாடுகள் சீர்குலைந்தன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்களின் உயிரையும் இது விழுங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகமெங்கும் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டன. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உணவின்றி தவிக்க வேண்டிய சூழல் உருவானது. பின்னர் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பரவல் குறைந்து, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பத் தொடங்கினர்.

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தனது கோரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. ஆசிய நாடுகளில் இது அதிகளவில் பரவ ஆரம்பித்துள்ளது. ஹாங்காங், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல மாநிலங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 511 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் ஒரே நாளில் 1,147 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா 424, டெல்லி 294, குஜராத் 223, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா தலா 148, மேற்கு வங்கத்தில் 116 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 2 பேர், டெல்லி, குஜராத், கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் நேற்று 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
பொதுமக்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். தற்போது, பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மையுடன் இருப்பதாகவும், வருங்காலத்தில் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் நம்மைச் சுற்றியுள்ள கொரோனா நிழல், ஒவ்வொருவரும் சுய பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.