புது டெல்லி: இந்தியா மற்றும் பூடான் இடையே 89 கி.மீ தூரத்தை கொண்ட இரண்டு புதிய ரயில் இணைப்புகளான கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-ஷம்ட்சே (மேற்கு வங்காளம்) ஆகியவை ரூ.4,033 கோடி செலவில் கட்டப்பட உள்ளன. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:-
பனார்ஹட்-ஷம்ட்சே மற்றும் கோக்ரஜார்-கெலேபு இடையே இரண்டு எல்லை தாண்டிய ரயில் இணைப்புகளை நிறுவ இந்தியா மற்றும் பூட்டான் அரசாங்கங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இது பூட்டானுடனான முதல் ரயில் இணைப்புத் திட்டமாகும். பூட்டான் வெளியுறவு செயலாளரின் வருகையின் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். இப்பகுதி மக்கள் சிறந்த பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

பூடான் அரசாங்கத்தால் சாம்ட்சே ஒரு தொழில்துறை நகரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. பூட்டான் மன்னரும் பிரதமரும் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள். கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி பூட்டானுக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் யால்போ வழங்கப்பட்டது.
2024 முதல் 2029 வரையிலான பூட்டானின் 13வது ஐந்தாண்டு திட்டத்திற்காக இந்தியா ரூ.10,000 கோடியை உறுதியளித்துள்ளது. இதில் திட்ட அளவிலான உதவி, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், பொருளாதார ஊக்கத்தொகைகள் மற்றும் திட்ட மானியங்கள் ஆகியவை அடங்கும். மேலும், 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வழங்கப்படும் உதவி 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தை விட 100 சதவீதம் அதிகம் என்று வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி கூறினார்.