புது டெல்லி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் 2040-ம் ஆண்டுக்குள் ஒரு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார் என்று கூறினார். திங்களன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சி பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய இந்தியாவின் சுபான்ஷு சுக்லாவைப் பற்றி விவாதிக்கும் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது உரையில் குறிப்பிட்டார். 2020 முதல் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதன் மூலம், நாட்டின் விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இது 45 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று அவர் கூறினார்.

“இந்தியா 2026-ம் ஆண்டில் வியோமித்ரா என்ற ரோபோவைப் பயன்படுத்தி ஆளில்லா விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும். அதன் பிறகு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2027-ம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். 2035-ம் ஆண்டில் இந்தியா ‘பாரத் அந்தர்க்ஷ் நிலையம்’ என்ற விண்வெளி நிலையத்தை நிறுவும். அதைத் தொடர்ந்து, 2040-ம் ஆண்டில், ஒரு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்கி தனது கால்தடத்தை பதிப்பார்.
இது 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு வழியாகும்,” என்று அவர் கூறினார். பீகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக, விவாதம் முழுமையாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.