புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 2-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு கடந்த 5-ம் தேதி ஒப்புதல் அளித்தார். வக்ஃப் திருத்தச் சட்டம் கடந்த 8-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அகில பாரத இந்து மகாசபா, இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் இந்த சட்டத்துக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிரான மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.