அக்டோபர் 1, 2023-க்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்றிதழை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம் 2023-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாஸ்போர்ட் வழங்குதல், கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம், ஆதார் எண் வழங்குதல் போன்றவற்றுக்கு பிறந்த தேதி மற்றும் இடச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
இதன் அடிப்படையில், பாஸ்போர்ட் (திருத்த) விதிகள், 2025, நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, அக்டோபர் 1, 2023-க்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது பிறந்த தேதிக்கான ஆவணமாக பிறப்புச் சான்றிதழை இணைப்பது கட்டாயமாகும். அதேநேரம், இந்த தேதிக்கு முன் பிறந்தவர்கள், பிறப்பு சான்றிதழ் இல்லாத பட்சத்தில், வழக்கம் போல், பிறந்த தேதிக்கான ஆவணமாக, மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் மாற்றுச் சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், அரசு ஊழியர்களாக இருந்தால் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல், அவர்களின் பணி ஆணை நகல், வாக்காளர் அட்டை, காப்பீட்டுக் கொள்கை போன்றவற்றை பிறந்த தேதிக்கான ஆவணமாக இணைக்கலாம். முன்னதாக, ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழை இணைக்க வேண்டும் என்று 1989-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு, பாஸ்போர்ட் விதிகளில், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்தால் போதுமானது என, திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.