பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்து எனக்கு தாமதமாக தகவல் கிடைத்தது. அதாவது, மாலை 5.45 மணிக்குத்தான் தகவல் கிடைத்தது, அதே நேரத்தில் சம்பவம் குறித்த செய்தி பிற்பகல் 3.15 மணிக்கு வெளியிடப்பட்டது.
இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அதனால்தான் உளவுத்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. இதில் அரசு நிர்வாகம் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்டத்தின்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் நகரின் மையப் பகுதியில் இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும். மகா கும்பமேளாவில் மக்கள் இறந்தபோது உத்தரபிரதேச முதல்வர் ராஜினாமா செய்தாரா? அப்போது பாஜக மற்றும் ஜேடி(எஸ்) அவரை ராஜினாமா செய்யச் சொல்லாதது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.