அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் பிரமாண்டமான கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அயோத்தி கோயிலின் 2-ம் கட்ட கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதில், ஸ்ரீ ராம் தர்பார், சிவன், விநாயகர், அனுமன் உள்ளிட்ட 8 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கங்கா தசராவையொட்டி நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அயோத்தி ராசிக் நிவாஸ் கோயிலின் தலைமை பூசாரி மஹந்த் ரகுவர் சரண் கூறுகையில், “இந்த ஆண்டு கங்கா தசரா புனிதமானது மட்டுமல்ல, வரலாற்று சிறப்புமிக்கது.
“500 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ‘ராஜா ராமர்’ என்று அழைக்கப்படும் ராமர், அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.