கொல்கத்தா: ஒடிசாவைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் மேற்கு வங்கத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை தனது காதலனுடன் வெளியே சென்று இரவு 8.30 மணிக்கு கல்லூரி விடுதிக்குத் திரும்பினார். அப்போது, ஒரு கும்பல் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றது. ஆண் நண்பரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- துர்காபூரில் மருத்துவ மாணவி மீதான பாலியல் வன்கொடுமை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற செயல்களை எந்த காரணத்திற்காகவும் நியாயப்படுத்த முடியாது. இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை அவர்கள் தேடி வருகின்றனர். அதே நேரத்தில், 23 வயது பெண் ஒருவர் நேற்று இரவு 12.30 மணிக்கு கல்லூரி வளாகத்தை விட்டு எப்படி வெளியேறினார்.

இதற்கு யார் பொறுப்பு? குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்த நேரத்தில், தனியார் கல்லூரிகள் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ‘இரவு நேர கலாச்சாரம்’ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
இது தொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தனது எக்ஸ் இணையதளத்தில், “பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, முதலமைச்சர் மம்தா பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுகிறார். சந்தேஷ் காலியில் ஒரு மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இப்போது இதேபோன்ற ஒரு கொடுமை நடந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.