ஜெய்ப்பூர்: மணிகா விஸ்வகர்மா ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை வென்றுள்ளார். நவம்பரில் தாய்லாந்தில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் சர்வதேச அழகுப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகுப் போட்டி 1926 முதல் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர், 1952 முதல் மீண்டும் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச அழகுப் போட்டியில் பங்கேற்க, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த நாடுகளில் அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்திற்கான போட்டி நடைபெற்றது.

இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 48 பேர் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பாக காமாக்ஷி ஆத்ரேயா பங்கேற்றார். பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு, இறுதிச் சுற்றுக்கு 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியின் இறுதிச் சுற்று நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை வென்றார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தான்யா சர்மாவும், ஹரியானாவைச் சேர்ந்த மெஹக் திங்க்ராவும் 2-வது மற்றும் 3-வது இடங்களை வென்றனர். ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நவம்பர் மாதம் தாய்லாந்தின் நந்துபுரியில் நடைபெறும். இந்தப் போட்டியில் மணிகா விஸ்வகர்மா இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.