திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். அப்போது, திருமலையில் காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், “‘முக அங்கீகாரம்’ மூலம் திருமலைக்கு வரும் பக்தர்களை அடையாளம் காணும் முறை செயல்படுத்தப்படும். இது தொடர்பாக எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்று அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, லக்கேஜ் கவுண்டர் பகுதியை ஆய்வு செய்தார்.

அங்குள்ள பக்தர்களின் குறைகளை விசாரித்தார். பின்னர் வைகுண்டம் கியூ வளாகத்தில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு அங்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் குறித்து விசாரித்தார். வார்டன்களின் சேவையை மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, இணை நிர்வாக அதிகாரி சோம நாராயணா மற்றும் பலர் உடனிருந்தனர்.