4 நாள் இந்தியா எரிசக்தி வார நிகழ்ச்சி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவில் பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளர்களாகிய நீங்கள் இதை ஆராய்வீர்கள் என்று நம்புகிறேன். 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்று அனைத்து நிபுணர்களும் கூறுகிறார்கள். இந்தியா தனது சொந்த வளர்ச்சியை மட்டுமல்ல, உலக வளர்ச்சியையும் உந்தும்.
எங்களிடம் வளங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். புத்தாக்கம் செய்ய நம் மனதை ஊக்குவிக்கிறோம். மூன்றாவதாக, எங்களிடம் பொருளாதார பலமும் அரசியல் ஸ்திரத்தன்மையும் உள்ளது. வளர்ந்த இந்தியாவிற்கு அடுத்த 20 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. அடுத்த 5 ஆண்டுகளில் பல மைல்கற்களை கடப்போம். 2030-க்குள் எரிசக்தி துறையில் பல இலக்குகளை அடைய திட்டமிட்டுள்ளோம். 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 500 ஜிகாவாட் அதிகரிக்க விரும்புகிறோம்.
மேலும் 5 மெட்ரிக் டன் பச்சை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் இலக்கை அடைய விரும்புகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள இலக்குகள், இந்த இலக்குகளை இந்தியா அடையும் என்பதைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 10-வது பெரிய பொருளாதாரத்தில் இருந்து 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி திறன் 32 மடங்கு அதிகரித்துள்ளது.
இன்று இந்தியா மூன்றாவது பெரிய சூரிய சக்தி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. புதைபடிவமற்ற எரிபொருள் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. பாரிஸ் காலநிலை மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் இலக்கை எட்டிய ஜி20 நாடுகளில் இந்தியா முதல் நாடு. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.