புதுடெல்லி: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ மூலம் வசூல் செய்யப்படுகிறது. சுங்கச்சாவடிகள் வழியாக அடிக்கடி செல்லும் உள்ளூர்வாசிகளின் வசதிக்காக, மாதந்தோறும் தள்ளுபடி கட்டணத்தில் ‘பாஸ்’ பெறும் வசதியும் உள்ளது. இதனிடையே, நீண்ட நேரம் காத்திருக்கும் நேரம் மற்றும் சுங்கச்சாவடிகளில் நெரிசலை தவிர்க்கும் வகையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
சுங்கச்சாவடியில் பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.30,000 செலுத்தி நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் வழியாக எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யும் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலைத்துறை விரைவில் அறிமுகப்படுத்தும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நடைமுறைப்படி ஒரு மாதத்திற்கு ரூ.340 செலுத்தி லோக்கல் பாஸ் பெறலாம்.இதன் மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு ரூ.4,080 செலவாகும். ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் பெறும் வசதி அமல்படுத்தப்பட்டால், இதிலும் ரூ.1,080 மிச்சமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.