டில்லி அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதியப்பட்ட நிலையில், பா.ஜ., அரசு முன்பு அடி பணிய மாட்டேன் என்று முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டில்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, டில்லி அரசு பள்ளிகளில் பொதுப்பணித்துறை மூலம் 2,400 வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் குற்றம்சாட்டியது. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்து உள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைதான சத்யேந்தர் ஜெயினும், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான மணீஷ் சிசோடியாவும் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் அவர்களுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, என் மீதும், சத்யேந்தர் ஜெயின் மீது மத்திய அரசு வழக்குப்பதிவு செய்ததாக கேள்வி பட்டேன். எங்கள் மீது பா.ஜ., அரசு எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும். ஆம் ஆத்மி தலைவர்கள் யாரும் பா.ஜ., முன்பு அடி பணிய மாட்டோம்,’ என்றார்.
தொடர்ந்து, பேசிய அவர், ‘ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி, டில்லி குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர் கொடுத்து விட்டீர்களா? பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர தொகை வழங்கி விட்டீர்களா?’ என்ற கேள்விகளை எழுப்பினார்.