பெங்களூர்: பெங்களூருவுக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி 3 வந்தே பாரத் ரெயில்களை தொடக்கி வைத்தார்.
கர்நாடகாவில் புதிதாக 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்று காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் பெங்களூரு வந்திறங்கிய பிரதமர் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் ரெயில்கள் பெங்களூரூ – பெலகாவி, அம்ரிஸ்தர் – ஸ்ரீ மாதா வைஷ்ணோ கத்ரா, நாக்பூர் (அஜ்னி) – புனே வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அதில் பயணம் செய்தார். பெங்களூருவில் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதை, சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதை ஆகியவற்றில் மெட்ரோ இயங்கி வருகிறது.
இந்நிலையில் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் பிரதமர் மோடி பச்சை கொடி அசைக்க இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.
இதை தொடர்ந்து ஜே.பி.நகர் 4-வது பிளாக் முதல் கடபுகெரே வரையிலான 3ஆம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, மதியம் 3 மணியளவில் மீண்டும் டெல்லிக்கு தனது தனி விமானத்தில் திரும்புவார்.