புது டெல்லி: ஐ.நா. பொதுச் சபையின் 80-வது கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி நியூயார்க்கில் தொடங்கும். இந்த அமர்வின் உயர்மட்ட பொது விவாதம் செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரை நடைபெறும். அமெரிக்க அதிபர் டிரம்ப் 23-ம் தேதி கூட்டத்தில் பேச உள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.
இருப்பினும், இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி காரணமாக அமெரிக்காவுடன் தற்போது நிலவும் மோதல் காரணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்லமாட்டார் என்பது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடிக்குப் பதிலாக இந்திய அரசு சார்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையின்படி, இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும், பிரதமர் மோடி கூட்டத்தைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இதுவரை பிரதமரின் பயண அட்டவணையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் சேர்க்கப்படவில்லை.
பிரதமர் மோடி நியூயார்க்கிற்குச் சென்றால், அவர் அதிபர் டிரம்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த சந்திப்பைத் தவிர்ப்பது நல்லது என்று மத்திய அரசு நம்புகிறது. விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கும் அமைச்சர் ஜெய்சங்கர், செப்டம்பர் 26 அன்று அமெரிக்காவில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.