புது டெல்லி: செப்டம்பர் 7, 2022 அன்று ‘இந்திய ஒற்றுமை யாத்திரையை’ தொடங்கிய ராகுல் காந்தி, டிசம்பர் 16, 2022 அன்று அணிவகுப்பின் போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “எல்லையில் சீனா 2,000 சதுர கி.மீ. நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. 2020-ம் ஆண்டில், லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் இந்திய வீரர்களைக் கொன்றது. சமீபத்தில், அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன வீரர்கள் இந்திய வீரர்களைத் தாக்கினர்.
இதையெல்லாம் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். ராகுல் காந்தியின் இந்த அறிக்கையை எதிர்த்து மத்திய பாதுகாப்புத் துறையின் எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா, லக்னோவில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். லக்னோ நீதிமன்ற வழக்கை எதிர்த்து ராகுல் காந்தி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த வழக்கு மறைமுக நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதால், லக்னோ நீதிமன்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.

இதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மே 29 அன்று அவரது மனுவை தள்ளுபடி செய்தது. ஜூன் 4 அன்று ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாஸ்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “எந்த அடிப்படையில் சீனா இந்தியாவின் 2,000 சதுர கிலோமீட்டர் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக நீங்கள் சொன்னீர்கள்? உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
“நீங்கள் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால், இதைச் சொல்ல மாட்டீர்கள். எல்லையில் மோதல் ஏற்படும் போது இதை எப்படிச் சொல்ல முடியும்?” என்றும் அவர் கூறினார். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா, “உண்மையான இந்தியர் யார் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் தீர்மானிக்க முடியாது என்பதை மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்விகள் கேட்பதும், சவால்களை எழுப்புவதும் எதிர்க்கட்சித் தலைவரின் கடமை. எனது சகோதரர் ஒருபோதும் ராணுவத்திற்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடுவதில்லை. அவர் ராணுவத்தை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். அவரது அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” என்றார்.