நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர்க்கை பெற, பொது நுழைவுத் தேர்வில் (கியூட்) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2025-26) முதுகலை படிப்புகளுக்கான கியூட் தேர்வு கணினி மூலம் மார்ச் 13 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெறும்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 2-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8-ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் 4 லட்சத்து 12,024 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், பாடவாரியான தேர்வு அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் https://exams.nta.ac.in/CUET-PG/ என்ற இணையதளத்திற்குச் சென்று அதன் விவரங்களைப் பார்க்கலாம்.

மேலும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தலாம் என என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.