டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதால் சாதாரண மக்களின் வாக்குரிமை பறிக்கப்படக் கூடாது. தேர்தல் ஆணையம் எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) வாக்காளர் பட்டியலில் வழக்கத்திற்கு மாறான சேர்த்தல், எதிர்பாராத நீக்கம் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை பலமுறை எழுப்பியுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களைக் கண்டறிய முடியும் என்றாலும், ஏழைகள் மற்றும் மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள் அதை இணைப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் எந்த ஒரு இந்தியரும் தங்கள் வாக்குகளை இழக்காமல் இருப்பதை உறுதிசெய்து, தனியுரிமைக் கவலைகளையும் தீர்க்க வேண்டும். இந்த விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால், 2024-ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களின் வாக்காளர் புகைப்படப் பட்டியலை முழுவதுமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று ராகுல் ட்வீட் செய்துள்ளார்.