மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் விவகாரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, மகாராஷ்டிராவை இந்தி மொழியாக மாற்ற வேண்டுமெனில் போராட்டங்கள் வெடிக்கும் என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன.
இங்கு, மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தியை மூன்றாம் மொழி பாடமாக கற்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இடைநிலைக் கல்வியில் இருந்து மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இப்போது அனைத்து மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பிலிருந்து ஹிந்தி கற்பிக்கப்பட வேண்டும். இது மராத்தி மற்றும் ஆங்கிலம் தவிர மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக இருக்கும்.

தேசிய கல்விக் கொள்கை 5+3+3+4 என்ற புதிய கல்வி முறையை முன்மொழிகிறது. இது 4 நிலைகளில் கல்வி கற்பிக்க முன்மொழிகிறது: முதல் 5 ஆண்டுகள் தொடக்கக் கல்வி, 3 ஆண்டுகள் ஆயத்தப் படிப்புகள், அடுத்த 3 ஆண்டுகள் இடைநிலைக் கல்வி மற்றும் 4 ஆண்டுகள் இடைநிலைக் கல்வி. இதன் அடிப்படையில் தொடக்கக் கல்வியில் மாற்றம் கொண்டு வர மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அவர் கூறுகையில், ‘5-ம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாய பாடமாக்குவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அனைத்திலும் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை அனுமதிக்க முடியாது. இந்தி தேசிய மொழி அல்ல. நாட்டில் உள்ள மற்ற மொழிகளைப் போலவே இதுவும் ஒரு மாநில மொழி. மகாராஷ்டிராவில் ஆரம்பக் கல்வியில் ஏன் கற்பிக்க வேண்டும். நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்தி பேசுபவர்கள் அல்ல. மாநிலத்தை இந்திமயமாக்க விரும்பினால் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.