பெங்களூரு: துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) மற்றும் சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அமலாக்க இயக்குனரகமும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. ரன்யா ராவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக டிஆர்ஐ ஏடிஜிபிக்கு ரன்யா ராவ் கடிதம் எழுதியுள்ளார். ரன்யா ராவ் எழுதியுள்ள கடிதத்தில், ‘என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவள் என்று என் தரப்பு நியாயத்தை முன்வைக்க உங்கள் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. சம்பவம் குறித்து விளக்கமளிக்க எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. துபாயில் இருந்து 14 கிலோ தங்கம் கடத்தி வருவதாக என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

அவர்கள் தயாரித்து வைத்திருந்த 50-60 பேப்பர்கள் மற்றும் 40 வெற்று பேப்பர்களில் கையெழுத்து போடும்படி என்னை அடித்து துன்புறுத்தினார்கள். என் கன்னத்தில் 15 முறை அறைந்து கையெழுத்திட கட்டாயப்படுத்தினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதில் நான் கையெழுத்து போடவில்லையென்றால் என் தந்தையையும் இதில் இழுத்துவிடுவேன் என்று அதிகாரி ஒருவர் மிரட்டினார். கடிதத்தில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தையான ராமச்சந்திர ராவ் கர்நாடக மாநில காவல்துறை வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார், மேலும் ரன்யா ராவ் ஏடிஜிபியாக உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கம் கடத்தி வந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏடிஜிபி ராமச்சந்திர ராவிடம் கூடுதல் தலைமைச் செயலாளர் கவுரவ் குப்தா விசாரணை நடத்தி வருகிறார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஏடிஜிபி ராமச்சந்திர ராவுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தில் ரன்யா ராவ் தங்கத்தை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கட்டாய விடுப்பில் செல்ல கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.